Thursday, May 9, 2013

வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:




1) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையில் அத்தியாயங்களான அஸ் ஸஜ்த, அல் இன்ஸான் என்ற இரண்டையும் ஓதுபவராக இருந்தார்கள். இவ்வத்தியாயங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் கப்ரிலிருந்தும், மறுமை நாளிலும் எழுப்பப்படுவன சம்பந்தமான விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2) ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வது: இந்த விஷயத்தில் முஸ்லிங்கள் அதிகம் பொடுபோக்காக இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலையில் சிலர் தூங்கிக் கொண்டும், இன்னும் சிலர் ஜும்ஆ ஆரம்பமான பின்னரும், மேலும் சிலர் இமாம் ஜும்ஆவுக்கு மின்பருக்கு ஏறுவதற்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்னருமாகவே செல்கின்றனர். இதில் கூடிய கவனம் செலுத்தி வெள்ளிக்கிழமை தினத்தில் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் பள்ளிவாசலில் அனைத்து நுழைவாயிலிலும் நிற்பார்கள். அவர்கள் முதல் முதலில் வருபவர்களது பெயர்களை பதிவு செய்வார்கள். பிரசங்கத்திற்காக இமாம் வந்துவிட்டால் தங்களது ஏடுகளை மூடிவிட்டு பிரசங்கத்தை செவிமெடுப்பதற்காக அமருவார்கள். இத்தினத்தில் பள்ளிவாசலுக்கு முதலில் வருபவர் ஒரு ஒட்டகத்தையும், இரண்டாவது வருபவர் ஒரு மாட்டையும், மூன்றாவது வருபவர் ஒரு ஆட்டையும், நான்காவது வருபவர் ஒரு கோழியையும், ஜந்தாவது வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவரை போன்றாவார்”

இந்த நபிமொழியில், பள்ளிவாசலுக்கு நேரத்தோடு வருபவரை தனது பொருளாதாரத்தால் தர்மம் செய்து அல்லாஹ்விடம் நெருங்குகின்றவர்களுக்கு ஒப்பாக கூறுகின்றார்கள். இதனால் எவர் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வருகின்றாரோ அவர் உடல் ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான இரண்டு வணக்கங்களையும் செய்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள்.

நமக்கு முன் சென்ற அறிஞர்கள் வெள்ளிக்கிழமை தினத்தில் வழக்கமாக நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். சில இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடும் பொழுது “வெள்ளியன்று சுபஹ் தொழுகைக்கு முன்னர் ஜும்ஆவுக்கு செல்வது நன்றாக இருக்கும்” ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் மக்கள் ஸஹருடைய நேரத்திலும் சுபஹ் தொழுகைக்கு பின்னாலும் பாதைகளில் திருநாட்களை போன்று பள்ளிவாசலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள், ஜும்ஆவுக்கு முன்னால் 12 ரக்அத்துக்கள் நபிலான தொழுகையை தொழுபவராக இருந்தார்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 8 ரக்அத்துக்கள் தொழுபவர்களாகவும் இருந்தார். அன்மைகாலத்தில் ஒருவர் ரியாதில் இருக்கின்ற பெரிய பள்ளிவாசலுக்கு சுபஹ் தொழுகைக்காக செல்பவர் ஜும்ஆ முடிந்ததன் பின்னரே வெளியே வருபவராக இருந்தார்.

பள்ளிவாசலுக்கு இத்தினத்தில் நேரத்தோடு செல்வதற்கு மிக முக்கியமான காரணி, இரவில் விழித்திருக்காமல் நேரத்தோடு தூங்கி காலையிலே உலக காரியங்களை விட்டுவிட்டு ஜும்ஆவுக்காக தாயாராவதாகும். இதனால் அல்லாஹ் அடியானுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்ற மகத்துவமான முழுமையான கூலியை அடைய முடியும்.

3) இத்தினத்தில் அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன் விசரனைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில் எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும் அல்லாஹ் ஹராமாக்கினான்” (ஆதாரம்: அஹ்மத்)

4) ஜும்ஆ தினத்தில் குழிப்பது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு செல்பவராக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது சுன்னத்தாகும்:இந்த விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். இதற்கு மாற்றமாக திருமண வைபவங்களுக்கும், விழாக்களுக்குமாக அழகான ஆடைகளை அணிந்து செல்லக்கூடிய முஸ்லிம்கள் நபிகளார் காட்டித்தந்த வாராந்திர திருநாளாகிய வெள்ளிக்கிழமை தினத்தில் கவனமின்மையாக இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மெளனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: அஹ்மத்)

6) அத்தியாயம் கஃபை ஓதுவது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வெள்ளிகிழமை தினத்தில் அத்தியாயம் கஃபை ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடையில் பிரகாசம் கிடைக்கும்” (ஆதாரம்: ஹாகிம்)

இந்த அத்தியாயத்தை பள்ளிவாசலில் மாத்திரம்தான் ஓத வேண்டிய அவசியமில்லை! வீட்டில் ஓதினாலும் போதுமானதாகும்.

7) இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அதனை சிறந்த முறையில் செவிமெடுக்க அதனை விளங்கி பிரயோஸனம் அடைய வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது ஒருவர் தனது சகோதரனுக்கு வாயை மூடு என்று கூறினால் அவர் தனது ஜும்ஆவை வீனாக்கிவிட்டார்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

8) மனிதர்களின் பிடரியை கடந்து செல்வதை விட்டும், தொழுகையாளியை நோவினை செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் மனிதர்களின் பிடரியை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து “உக்கார்ந்து விடுங்கள். நிச்சயமாக நீங்கள் அவர்களை நோவினை செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.(ஆதாரம்: அஹ்மத்) பெரும்பாலும் பள்ளிவாசலுக்கு பிந்திவருபவருக்கே இவ்வாரான சந்தர்ப்பம் நிகழும்.

8) ஜும்-ஆ தொழுகை முடிந்து விட்டால் தொழுகைக்கு பின்னால் ஓதக்கூடிய துஆக்களை ஓத வேண்டும்; பின்னர் பள்ளிவாசலில் 4 ரக்அத்துக்கள் சுன்னத்து தொழுது கொள்ளவேண்டும். வீட்டில் தொழக்கூடியவராக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டும், வீட்டில் இரண்டும் தொழுது கொள்ளவேண்டும்.

சகோதரர்களே! இத்தினத்தின் சிறப்புக்களையும் நபியவர்களின் வழிமுறைகளையும் இத்தினத்தில் நடந்து கொள்ளவேன்டிய ஒழுங்குமுறைகளையும் அறிந்த நாம், இதனது முழுமையான சிறப்பையும் நன்மையையும் அடைய இறைவன் அருள் புரிவானாக! இறைவனிடத்தில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அந்த நேரத்தை அடைவதற்கு இறைவன் அருள் புரிவானாக!

நாம் அனைவரும் இறைவனை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி அவனை மாத்திரமே வணங்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அரபி மூலம்: அப்துல் மலிக் அல் காஸிம்
தமிழில்: அர்ஷத் ஸாலிஹ்.

عنوان الترجمة:الجمعة يوم عبادة باللغة التاميلية
المترجم:محمد أرشد محمد صالح
الداعي بالمكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة الخفجي
التاريخ:29/02/1432هـ,يوم الأربعاء.

-மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி

உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் —

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்